ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

ஆசிரியைகளை செல்போனில் படம் பிடித்து அத்துமீறல் செய்த 4 மாணவர்கள் சஸ்பெண்ட்.


சங்கரன்கோவில் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் டூ மாணவர்கள் ஆசிரியைகளை செல்போனில் படம்பிடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஒன்றியம் திருமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 வரலாற்று பிரிவு மாணவர்கள் சிலர் வகுப்பறையில் ஆசிரியைகளை கேலி செய்ததுடன், அவர்களை செல்போனிலும் படம் பிடித்து அத்துமீறி நடந்து கொண்டனர். இது குறித்து ஆசிரியைகள் அளித்த புகாரின்பேரில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 4 பேர் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த 5ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 மாணவர்களும் பள்ளிக்கு வந்து சக மாணவர்களுடன் சேர்ந்து மீண்டும் ஆசிரியைகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர். இது குறி்த்து பாதிக்கப்பட்ட ஆசிரியைகள், உதவி தலைமை ஆசிரியை ஆனி ஜோஸ்லின் ஆகியோர் பெற்றோர் ஆசிரியர் கழகத்திடம் முறையிட்டதன்பேரில் நேற்று முன்தினம் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 11 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளி தொடங்கியதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 11 மாணவர்களும் அங்கு வந்து தங்கள் துறையைச் சேர்ந்த 36 மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க அழைத்துச் சென்றனர். இதனிடையே திருமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலோச்சனா ரத்னாவதி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் டோரா ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் உதவி தலைமை ஆசிரியை ஆனி ஜோஸ்லின் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர்.

செவ்வாய், செப்டம்பர் 04, 2012

6 மாத கர்ப்பிணியாக ஜெயிலில் இருக்கும் கல்யாண ராணி சகானாவை மீண்டும் கைது செய்ய போலீஸ் முடிவு.


கேரள அழகி சகானா வழக்கில் முகலிவாக்கம் மணிகண்டன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த மோசடி புகாரில் மாங்காடு போலீஸ் இன்ஸ் பெக்டர் ஆதிமூலம் வழக்குப் பதிவு செய்து விசாரித்தார். அதேபோல அடையாறு சரவணன் கொடுத்த புகாரின் பேரில் சாஸ்திரிநகர் போலீசார் விசாரித்தனர். சரவணன் கொடுத்த புகார் அடிப்படையில் சகானா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மணிகண்டன் புகார் தவிர, திருவொற்றியூர் சரவணன், புளியந்தோப்பு, பிரசன்னா, புரசைவாக்கம் சம்சுதீன் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேப்பேரி, திருவொற்றியூர் புளியந்தோப்பு காவல் நிலையங்களில் சகானாவுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் முகலிவாக்கம் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், சகானாவை மீண்டும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர் இதற்காக அனுமதி கேட்டு, மாங்காடு போலீசார் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் இன்று காலை மனுதாக்கல் செய்தனர். இந்த மனு இன்று மாலை விசாரணைக்கு வருகிறது. கோர்ட்டு அனுமதி கொடுத்ததும் புழல் ஜெயிலில் உள்ள சகானாவை கைது செய்து, வாக்குமூலம் பெற திட்டமிட்டுள்ளனர். புழல் ஜெயிலில் சகானாவுக்கு மற்ற விசாரணை கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் அளிக்கப்படுகிறது. சக பெண் கைதிகளுடன் அவர் சகஜமாக பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வாக்குமூலத்தில் அவர் சொன்னபடி, ஜெயிலில் உள்ளவர்களிடமும் தான் 4 பேரை மட்டுமே திருமணம் செய்து கொண்டேன். இவர்களை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறி வருகிறார். சகானா 6 மாத கர்ப்பிணியாக இருப்பதால் டாக்டர்கள் அவரை தினமும் பரிசோதிக்கின்றனர்.