செவ்வாய், ஜனவரி 24, 2012

ரயில் கட்டணம் உயர்கிறது: 25 சதவீதம் அதிகரிக்கலாம்


ரயில் கட்டணம் உயர்கிறது: 25 சதவீதம் அதிகரிக்கலாம்
 1/1 

புதுடெல்லி, ஜன.24 - ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணம் உயருகிறது. கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று பிரதமரின் ஆலோசகர் சாம்பிட்ரோடா தலைமையிலான உயர்மட்டக்குழு பரிந்துரைத்துள்ளது. பயணிகள் ரயில்கட்டணம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உயர்த்தப்படாமல் இருக்கிறது. அதிகரித்துவரும் செலவுகள், டீசல் விலை உயர்வு, நவீனமயம் போன்றவற்றை ஈடுகட்ட ரயில்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ரயில்வே வாரியம் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் ரயில்வேயில் சீர்திருத்தங்கள் செய்வது குறித்து ஆலோசனை கூறுவதற்காக பிரதமரின் ஆலோசகர் சாம்பிட்ரோடா தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி அமைத்தார். ரயில்வே கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அவ்வப்போது ரயில்வே அமைச்சர் திரிவேதி கூறிவந்ததை திரிணாமுல் தலைவரும் மேற்குவங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி ஏற்கவில்லை. 
இந்நிலையில் 2012-13 க்கான ரயில்வே பட்ஜெட் அடுத்த 2 மாதங்களில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக திரிவேதி அமைத்த உயர்மட்டக் குழு தனது பரிந்துரையை திட்டக்குழுவிடம் தாக்கல் செய்தது. அதில் பயணிகள் ரயில் கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திரட்டப்படும் ரூ. 37,500 கோடி நிதியை  ரயில்வேயை நவீனப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயை நவீனப்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 9 லட்சத்து 13 ஆயிரம் கோடி தேவைப்படும் என்பதால் பயணிகள் கட்டணம் மட்டுமல்லாமல் சரக்கு கட்டணம் உள்ளிட்ட பிற கட்டணங்களும் உயர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரயில்வேயில் வர்த்தக ரீதியான நிலத்தின் மூலம் ரூ. 50 ஆயிரம் கோடியும், சிக்கன நடவடிக்கையின் மூலம் ரூ. 15 ஆயிரம் கோடியும், சரக்கு கட்டணம் மூலம் ரூ. 40 ஆயிரம் கோடியும் கூடுதல் கட்டணம் மூலம் ரூ. 10 ஆயிரம் கோடியும் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் 1 லட்சத்து 79 ஆயிரம்கோடியும் திரட்ட வேண்டும் என்று உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக