ஞாயிறு, ஜனவரி 29, 2012

தமிழகத்தில் ரூ.30 கோடி செலவில் விளையாட்டு அரங்குகள்


தமிழகத்தில் 20 மாவட்டங்களில் ரூ.30 கோடி செலவில் விளையாட்டு அரங்குகள்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
 1/1 

சென்னை, ஜன.29 - இளைய சமூகத்தின் மத்தியில் விளையாட்டு துறையை மேம்படுத்த பல்நோக்கு நடவடிக்கைகளை எடுக்கும் முதல்வர் ஜெயலலிதா முதற்கட்டமாக திருச்சி, மதுரை உள்விளையாட்டு அரங்கை அமைக்க நிதியை ஒதுக்கியுள்ளார். மேலும் 20 மாவட்டங்களில் உள்விளையாட்டு அரங்குகளை அமைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது: காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா என்ற பாரதியின் கூற்றுப்படி, ஒவ்வொருவருக்கும் படிப்பும், விளையாட்டும் இரண்டு கண்களாகும்.  படிப்பு, அறிவை வளர்க்கும்;  விளையாட்டு, உடல் நலத்தை காக்கும்; என்பதை உணர்ந்து கல்வி, விளையாட்டு என்ற இரண்டிலும் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இதன் மூலம் அறிவார்ந்த ஆரோக்கியமான இளைய சமுதாயம் உருவாகும். இதன் அடிப்படையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கல்வியைப் போல, விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அந்த வகையில், கூடைப்பந்து மற்றும் கையுந்து பந்து விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில், திருச்சி, திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் கால்வாலியம் செயற்கை தகடுகளான மேற்கூரை வசதியுடன் கூடிய கூடைப்பந்து மற்றும் கையுந்து பந்து விளையாட்டு மைதானங்கள், 1 கோடியே 50 லட்சம் ரூபாயில், அதாவது ஒவ்வொரு இடத்திலும் 50 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும், மதுரையில் பன்னாட்டு தரம் வாய்ந்த செயற்கை இழை ஹாக்கி மைதானம், நீர்தெளிப்பான், மூடிய வடிகால் வசதி மற்றும் மின்னொளி வசதியுடன் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாநகரில் தடகளப் போட்டியினை ஊக்குவிக்க, 8 ஓடுகளப் பாதைகளுடன் கூடிய செயற்கை இழையிலான தடகள ஒடுபாதை, மூடிய வடிகால் வசதி மற்றும் மின்னொளி வசதியுடன் 6 கோடி ரூபாயில் செலவில் உருவாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
முதலமைச்சர் கோப்பைக்காக, மாநில அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடை பந்து, கால்பந்து, ஹாக்கி , கபாடி மற்றும் கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகள் 4 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில் நடத்துவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்கள்.
உலகத் திறனாளர்களை கண்டறியும் திட்டத்தின் கீழ் 3,240 இளம் விளையாட்டு வீரர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி வாகை சூட ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் 6,000/​  ரூபாய் ஊக்கத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இத் திட்டத்திற்கு 1 கோடியே 94 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும்.   தற்போது உலக அளவில் அனைத்து விளையாட்டுகளும், செயற்கை தளங்களில் உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கிலும் நடைபெற்று வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு உலகத் தரம் வாய்ந்த செயற்கை தளங்கள் அமைக்க மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் பல்வேறு விளையாட்டுக்களை மேம்படுத்தி, பல்வேறு இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களின் பணிக்காக முதற்கட்டமாக 8 வாகனங்களை 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்குவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
மாவட்டங்களில் பல்வேறு விளையாட்டுகளில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் திறனை வளர்பபதற்கு பல்நோக்கு வசதிகள் கொண்ட விளையாட்டு அரங்கங்களை அமைப்பது மிகவும் அவசியம்.  எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 30 கோடி ரூபாய் செலவில் பார்வையாளர்களுக்கான இருக்கை வசதி, மரத்தாலான தரைத்தளம் மற்றும் மின்வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய உள் விளையாட்டு அரங்கங்களை 20 மாவட்டங்களில் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள்.   முதற்கட்டமாக, 5 மாவட்டங்களில் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் இவ்விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் தற்போது 9 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.  இந்த விளையாட்டு விடுதிகள் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்க இயலாத சூழ்நிலை உள்ளது.  இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு விளையாட்டு விடுதி வீதம், 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகளை அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  ஆணையிட்டுள்ளார்கள். இதன்படி, ஒவ்வொரு விளையாட்டு விடுதியிலும் 60 மாணவ, மாணவியருக்கு உயர்தர பயிற்சி அளிக்கப்படும்.  இவர்களுக்கு உணவு, உறைவிடம் மற்றும் இதர வசதிகள் அனைத்தும் வழங்கப்படும்.  முதற்கட்டமாக, 5 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும்.  இதற்காக அரசுக்கு 3 கோடி ரூபாய் தொடரா செலவினமும், 1 கோடியே 15 லட்சம் ரூபாய் தொடர் செலவினமும் ஏற்படும்.
மேற்கூறிய, அரசின் பல்நோக்கு நடவடிக்கைகளினால், தமிழகத்தில்  விளையாட்டுத்துறை ஒரு புதிய சகாப்தம் படைக்கும் என்று சொன்னால் மிகையாகாது. இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக