வெள்ளி, மார்ச் 09, 2012

இஸ்ரேலின் நிர்பந்தத்​தால் ஈரான் பத்திரிகையா​ளரை கைது செய்​த இந்திய அரசு!

புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக காரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் இஸ்ரேலின் நிர்பந்தம் காரணமாக இந்திய அரசு ஈரான் பத்திரிகையாளரை கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லியில் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மி சில உருது பத்திரிகைகளிலும், ஈரானில் சில பத்திரிகைகளிலும் எழுதிய இஸ்ரேலுக்கு எதிரான கட்டுரைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. கஸ்மியின் கைது டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கு இடையே கடுமையான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. ரேடியோ டெஹ்ரான் மற்றும் ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான இர்னா ஆகியவற்றில் பணியாற்றிய கஸ்மி இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு ஈரானுடன் தொடர்புடைய இதர நபர்களுடன் கண்காணிப்பில் இருந்தார். இந்தியாவின் விசாரணையை கண்காணித்துக்கொண்டிருந்த இஸ்ரேல் வட்டாரங்கள் கஸ்மியை கைது செய்ய நிர்பந்தம் அளித்துள்ளதாக கருதப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சார்ந்த கஸ்மி கடந்த 30 ஆண்டுகளாக டெல்லியில் பத்திரிகைத்துறையில் தீவிரமாக பணியாற்றி வருகின்றார். மத்திய அரசின் ப்ரஸ் இன்ஃபர்மேசன் பீரோவின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளரான கஸ்மி தூதரக பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக பங்கேற்றுள்ளார். தனது கட்டுரைகளில் ஃபலஸ்தீனில் அப்பாவி மக்களை கொலைச் செய்யும் இஸ்ரேலை கடுமையான மொழியில் விமர்சிப்பார் கஸ்மி. இவரது கட்டுரைகளை அரபு மொழி பத்திரிகைகள் மொழிப்பெயர்த்து வெளியிடுவதுண்டு. கஸ்மியை பலிகடாவாக்க இக்கட்டுரைகள் தாம் தூண்டுகோலாக அமைந்துள்ளன என்று கருதப்படுகிறது. 2003-ஆம் ஆண்டு ஈராக் போர் குறித்து தூர்தர்சன் மற்றும் பி.பி.சிக்காக ரிப்போர்ட் செய்த கஸ்மி ஈரான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து பாரசீக மொழியிலும் புவியியலிலும் பட்டமேற்படிப்பை முடித்துள்ள 50 வயதான கஸ்மி தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் டெல்லியில் பி.கே.தத் காலனியில் வசித்து வந்தார். குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டவர்களை குறித்து இந்தியாவுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், ஈரானை பகைக்க வேண்டாம் என்பதால் மூடி மறைப்பதாகவும் இஸ்ரேலின் நாளிதழான ஹாரட்ஸ் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி தூதரக ரிப்போர்டர் பராக் ராவிட் என்பவர் அளித்த செய்தியாகும் அது. கஸ்மியை கைது செய்தது தன்னை ஆச்சரியமடையச் செய்ததாகவும், தன்னிடம் போலீஸ் கட்டாயப்படுத்தி கைது மெமோவை எழுதி வாங்கியதாகவும் கஸ்மியின் மகனும், எம்.பி.ஏ பட்டதாரியுமான ஷவ்ஸாப் கூறுகிறார். “எனது தந்தை நிரபராதி ஆவார். போலீஸ் அவரை பலிகடாவாக மாற்றுகிறது” என்று ஷவ்ஸாப் கூறுகிறார். ஈராக் போரை தனது உயிரை பணயம் வைத்து ரிப்போர்ட் செய்த தேசிய ஹீரோதான் கஸ்மி. அவரை பொய் வழக்கில் சிக்கவைத்துள்ளார்கள். கஸ்மியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வேளையில் அவரது வழக்கறிஞர் அஜய் அகர்வால் வாதிட்டார். கஸ்மி தற்போது போலீஸ் கஸ்டடியில் உள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக