செவ்வாய், டிசம்பர் 18, 2012

உலக அழிவு குறித்து வதந்தி பரப்பிய 93 பேர் சீனாவில் கைது


உலக அழிவு குறித்து அச்சத்தை உருவாக்கும் வண்ணம் வதந்திகள் பரப்பியதாக சீனாவில் 93 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் உலகம் அழிந்து விடும் என்ற தீர்க்கதரிசனங்களால் ஏற்பட்ட பயத்தில் ஒரு பாடசாலைக்குள் புகுந்து 23 சிறுவர்களைத் தாக்கிய மன நிலை பாதிக்கப் பட்ட ஒரு ஆடவரும் அடங்குகின்றார். இந்த 93 பேரும் சீனாவின் 7 மாகாணங்களில் இருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சீனாவில் தடை செய்யப்பட்ட 'அல்மைட்டி கோட்' எனும் மரபின் உறுப்பினர்கள் ஆவர். மேலும் இவர்கள் வீதிகளில் சென்று கொண்டிருந்த பொது மக்களிடம் உலக அழிவு குறித்து துண்டுப் பிரசுரங்களையும் எச்சரிக்கைகளையும் விநியோகித்த குற்றத்துக்காக கைது செய்யப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல்மைட்டி கோட் உறுப்பினர்களின் முக்கிய எச்சரிக்கையாக டிசம்பர் 21 ஆம் திகதி மாயன் தீர்க்கதரிசனப்படி சூரியன் வானில் தென்படாது எனவும் மூன்று நாட்களுக்கு மின்சாரம் தடைப்படும் என்பதும் வதந்திகளாகப் பரப்பப் பட்டதாக சீனாவின் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை சீனாவின் ஹெனான் மாகாணத்தில் மின் யோங்ஜுன் எனும் ஆடவர் அருகிலுள்ள பள்ளியில் புகுந்து 23 சிறுவர்களைத் தாக்கிய குற்றத்துக்காக கைது செய்யப் பட்டுள்ளார். இவர் உலக அழிவு குறித்த தீர்க்கதரிசனங்களால் கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர் என பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக