சனி, ஜனவரி 28, 2012

முதல்வர் சார்பில் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு


சென்னை நீதி மன்றத்தில் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு: முதல்வர் ஜெயலலிதா சார்பில் அரசு வக்கீல் தொடர்ந்தார்
 1/1 

சென்னை, ஜன.28 - சென்னை நீதிமன்றத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். சென்னை நகர அரசு குற்றவியல் வக்கீல் எம்.எல்.ஜெகன் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. சென்னை தேனாம் பேட்டையைச் சேர்ந்த சேஷாத்திரி குமார் கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவரது மகன் உதய நிதி ஸ்டாலின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த புகார் தொடர்பாக கடந்த 2.12.2011 அன்று மு.க.ஸ்டாலின் போலீஸ் டி.ஜி.பிக்கு புகார் மனு கொடுத்துள்ளார்.
அப்பொழுது செய்தியாளர்கள் நடுவில் பேட்டி அளித்த ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார். கொட நாடு சிறுதாவூர் நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் உண்மையான நில ஆக்கிரமிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் முதல்வர் ஜெயலலிதா மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகார் பொய்யானது எனத் தெரிந்திருத்தும் முதல்வர் மீது ஸ்டாலின் பொய் புகார் கொடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பேட்டி கொடுத்துள்ளார்.
தமிழக முதல்வருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை இந்த புகார் மற்றும் பேட்டி ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியானது பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அவதூறு பேட்டி கொடுத்த மு.க.ஸ்டாலினை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக