வெள்ளி, மே 04, 2012

சொல்லாமல் கொள்ளாமல் நேட்டோ ஏவுகணைகளை தாக்கி தூள் தூளாக்குவோம்-ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ: கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணைகளை நிறுத்துவதை நேட்டோ உடனடியாக நிறுத்தாவிட்டால் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி அழிப்போம் என்று ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது. போலந்து, செக், ஹங்கேரி, ருமேனியா, செர்பியா, போஸ்னியா, பல்கேரியா, சரயேவோ, லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ், துருக்கி, கிரீஸ் உள்ளிட்டவை கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள சில நாடுகளாகும். இதில் லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்டவை முன்னாள் சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த நாடுகளாகும். சோவியத் யூனியன் சிதறுண்ட பின்னர் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் சில சேர்ந்து விட்டன. இதனால் ரஷ்யா ஏற்கனவே 'காண்டாகிக்' கிடக்கிறது. இந்த நிலையில் நேட்டோவில் இணைந்துள்ள முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளை தனது ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தில் இணைத்துள்ள அமெரிக்கா, அந்த நாடுகளில் தனது தாக்குதல் ஏவுகணைகளை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இது ரஷ்யாவை மேலும் கடுப்பாக்கியுள்ளது. இதுகுறித்து கடந்த ஆண்டே ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த ஏவுகணைத்திட்டம் தொடர்பாக அமெரிக்காவும், நேட்டோவும், ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வர வேண்டும்.இல்லாவிட்டால் பதிலடி தருவோம் என்று அவர் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் ரஷ்ய ராணுவ தலைமைத் தளபதி நிக்கோலாய் மகரோவ் அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நிலைமை மோசமானால், நாங்களாகவே நேட்டோ ஏவுகணை தளங்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தும் நிலை உருவாகும் என்று எச்சரிக்க விரும்புகிறோம். இதை அமெரிக்காவும், நேட்டோவும், தவிர்க்கும் என்று நம்புகிறோம். கிழக்கு ஐரோப்பாவில் தனது ஏவுகணைகளை நிறுத்தி வருவதை அமெரிக்கா உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும். அதற்கு ரஷ்யா பொறுப்பாக முடியாது என்றார் அவர். ஆனால் ஈரானிடமிருந்து வரும் ஏவுகணைத் தாக்குதல் அபாயத்திலிருந்து கிழக்கு ஐரோப்பாவைக் காக்கவே ஏவுகணைகளை நிறுத்துவதாக அமெரிக்கா கூறி வருகிறது. இதே ஒரேயடியாக ரஷ்யா நிராகரித்து விட்டது. அமெரிக்கா தொடர்ந்து பிடிவாதமாக இதை செயல்படுத்தி வருவது ரஷ்யாவின் தாக்குதல் பலத்தை கேலி செய்வது போலாகும் என்று ரஷ்யா கோபத்துடன் கூறியுள்ளது. தனது முதல் கட்ட ஏவுகணைப் பாதுகாப்பு வளையத் திட்டத்தின் கீழ் துருக்கியில் அதி நவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட போர்க் கப்பல்களை அமெரிக்கா கொண்டு வந்து நிறுத்தியது. இதையடுத்து ருமேனியா, போலந்து ஆகிய நாடுகளிலும் அது இதை கொண்டு வந்தது. அடுத்து முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளுக்குள்ளும் நுழையவுள்ளது. இதற்குப் பதிலடியாக போலந்து நாட்டுடனான தனது எல்லைப் பகுதியான கலினிகிராட் என்ற இடத்தில் ரஷ்யா தனது ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்காவுக்கு நேரடியாக அது எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக