திங்கள், ஜூன் 11, 2012

நடுவானில் பெண் பைலட்டுகள் ஓட்டிய விமானத்தில் முன்பக்க டயர் கழண்டு விழுந்தது. 52 பேர் காயம்.


அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் முன்பக்க டயர் கழன்று விழுந்தது. விமானம் குவாஹாட்டியில் தரையில் இறக்கப்பட்டபோது, விமானத்தில் இருந்த 52 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அதிருஷ்டவசமாக பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. பெண் பைலட்டுகளின் சாமர்த்தியம்: அந்த விமானத்தை சாமர்த்தியமாக தரை இறக்கிய பைலட்டுகள் ஊர்மிளா யாதவ், யாஷு ஆகிய இருவருமே பெண்கள் குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் அசாம் முதல்வர் தருண் கோகோய் பாராட்டுத் தெரிவித்துள்ளார். கழன்று விழுந்தது டயர்: முன்னதாக சில்சாரில் இருந்து குவாஹாட்டிக்கு பயணிகள், பணியாளர்கள் என 52 பேருடன் ஞாயிற்றுக்கிழமை காலை இந்த விமானம் புறப்பட்டது. விமானம் வானில் கிளம்பிய உடனேயே விமானத்தில் இருந்து ஒரு பொருள் தரையில் விழுந்ததை விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் கண்டறிந்தனர். விமான நிலைய ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது விமானத்தின் முன்பக்கத்தில் இருக்கும் இரு டயர்களில் ஒன்று கழன்று தரையில் விழுந்திருப்பது தெரியவந்தது. எனினும் விமானம் குவாஹாட்டி சென்றது. டயர் கழன்றது குறித்து விமானிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை எப்படியாவது பத்திரமாக தரையிறக்கும் முயற்சியை விமானிகள் மேற்கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: விமானம் தீப்பிடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் இருக்கும் எரிபொருள் தீரும்வரை வானில் பலமுறை வட்டமிட்டது. விமான நிலையத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விமானத்தை வழக்கமான முறையில், அதே நேரத்தில் சற்று மெதுவாக தரையிறக்கும்படி பைலட்டுகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதன்படி விமானம் தரையிறக்கப்பட்டது. காயத்துடன் தப்பினர்: எனினும் முன்பக்கத்தில் ஒரு டயர் இல்லாமல் தரையிறங்கியதால் விமானம் கடுமையாகக் குலுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 52 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக