வியாழன், ஜூன் 21, 2012

அரசுபேருந்து மோதி விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி


சென்னை, ஜூன்.- 21 - சென்னையில் அரசு பேருந்து மோதியதில் விபத்தில் பலியான பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை, ஐஸ் ஹவுஸ், டாக்டர் பெசன்ட் ரோடு அருகில் 16.6.2012 அன்று இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது மாநகர அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணம் செய்த, ராயப்பேட்டையைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மனைவி சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இச்சாலை விபத்தில் அகால மரணமடைந்த சுமதியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துயரச் சம்பவத்தில் காலமான சுமதியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக