சென்னை, ஜன. 22 - அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலன் கருதி இன்று (ஜன -22) முதல் வரும் பிப்ரவரி மாதம் 12 ந் தேதிவரை 4 ஞாயிற்றுக் கிழமைகளில் ரேஷன் கடைகள் திறந்து வைக்கவும், அதற்கு பதிலாக நாளை மறு நாள் (ஜன23) முதல் பிப்ரவரி மாதம் 13ந் தேதி வரை 4 தங்கள் கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
2012ஆம் ஆண்டில் குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணி சனவரி மற்றும் பிப்ரவரி 2012 மாதங்களில் நடைபெற்று வருகிறது. அரசு பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்களது பணியின் காரணமாக நியாய விலை கடைகளுக்கு சென்று தங்களது குடும்ப அட்டைகளை பணி நாட்களில் புதுப்பிக்க இயலவில்லை என்றும், எனவே தங்களுடைய குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்து புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளனர்.
எனவே, அரசு பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கு ஏதுவாக, 22.1.2012, 29.1.2012, 5.2.2012 மற்றும் 12.2.2012 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில், நியாயவிலைக் கடைகளை திறந்துவைத்து குடும்ப அட்டைகளை புதுப்பித்தல் மற்றும் பொருள்கள் வழங்கும் பணியினை மேற்கொள்ள அனுமதித்தும் அதற்கு பதிலாக 23.1.2012, 30.1.2012, 6.2.2012 மற்றும் 13.2.2012 ஆகிய தேதிகளை நியாயவிலைக் கடை பணியளர்களுக்கு விடுமுறை தினங்களாக அறிவித்தும் அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக