வெள்ளி, மே 18, 2012

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 4 பேர் சாவு


சுற்றுலா வந்தபோது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கே.வி.குப்பம் மகமத் நகரை சேர்ந்த 16 பெண்களும், 4 வாலிபர்களும் என மொத்தம் 20 பேர் நேற்று ஒரு வேனில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். அந்த வாகனத்தை ஒகேனக்கல்லில் நிறுத்தி விட்டு பெண்கள் 16 பேரும் காவிரி ஆற்று பகுதியில் குளிக்க சென்றனர். வாலிபர்கள் அருண் என்கிற ஜஸ்டிஸ்(வயது19), திணேஷ்(18), யஸ்வந்த்(18), சிலம்பரசன்(24) ஆகிய 4 பேரும் தொங்கு பாலம் வழியாக நடந்து சென்று கோத்திக்கல் ஆலமரம் பகுதியில் குளிக்க சென்றனர். கோத்திக்கல் ஆலமரம் பகுதி ஆழமான பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடைவிதித்து உள்ளனர். இதை அறியாமல் அந்த வாலிபர்கள் 4 பேரும் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர். அப்போது ஒரு வாலிபர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதையறிந்த மற்ற வாலிபர்கள் 3 பேரும் அவரை மீட்க முயன்றனர். இதில் 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர். இதை அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ஊர்க்காவல் படை வீரர்கள் பார்த்து விட்டனர். உடனே அவர்கள் தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் அந்த 4 பேரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர். உடனே இது குறித்து அவர்கள் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் மீனவர்கள், பரிசல் ஓட்டிகள் உதவியுடன் தண்ணீரில் மூழ்கி இறந்த வாலிபர்களின் உடல்களை மீட்டனர். இது அவர்களுடன் சுற்றுலா வந்த பெண்களுக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆலமரம் பகுதிக்கு விரைந்து சென்று இறந்த அந்த 4 வாலிபர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இது தொடர்பாக இறந்த அந்த வாலிபர்களின் பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். ஆற்றில் மூழ்கி இறந்த 4 வாலிபர்களின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தண்ணீரில் மூழ்கி இறந்த அருண் என்கிற ஜஸ்டிஸ், திணேஷ் ஆகிய 2 பேரும் அண்ணன்-தம்பி ஆவார்கள். யஸ்வந்த் தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார். சிலம்பரசன் எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்து வந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக