சனி, ஜூன் 02, 2012

சென்னையில் இன்று முதல் மின்வெட்டு நேரம் ஒரு மணிநேரமாக குறைப்பு. ஜெயலலிதா


தமிழகத்தில் மின் வெட்டு செய்யப்படும் நேரம் குறைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதையடுத்து சென்னையில் தினசரி ஒரு மணி நேரமும், பிற மாவட்டங்களில் மூன்று மணி நேரமும் இனி மின்வெட்டு அமலில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல உயர் மின் அழுத்த மற்றும் குறைந்த மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான வாரம் ஒரு நாள் மின்சார விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை கட்டாய மின்சார விடுமுறை ஆகியனவும் முற்றிலுமாக நீக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க மாநிலம் முழுவதும் மின்வெட்டு அமலில் உள்ளது. மின்சார தட்டுப்பாடு ஜூன் முதல் படிப்படியாக நீங்கும் எனவும், அதன் மூலம் மின்வெட்டு குறைக்கப்படும் எனவும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின்போது முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்தின் மின் நிலைமை குறித்து முதல்வர் தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் இப்போது நிலவி வரும் மின்வெட்டை படிப்படியாகக் குறைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:கடந்த சில வாரங்களாக காற்றாலைகளின் மூலம் அதிகளவு மின்சாரம் கிடைக்கிறது. இதனால், மாநிலத்தின் மின் நிலைமை இப்போது கணிசமான அளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது.அதுமட்டுமல்லாது, மே 10-ம் தேதியன்று தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக, மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தில் போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.இதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் மேட்டூர் அனல் மின் நிலையம், தனது முழு உற்பத்தித்திறனான 840 மெகாவாட் மின்னுற்பத்தியை தொடங்கி விட்டது.இந்தச் சூழ்நிலையில், மின் தட்டுப்பாடு காரணமாக இப்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சனிக்கிழமை (ஜூன் 2) முதல் தளர்த்துவது என முடிவு எடுக்கப்பட்டது. உயர் மின் அழுத்த மற்றும் குறைந்த மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான வாரம் ஒரு நாள் மின்சார விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை கட்டாய மின்சார விடுமுறை ஆகியன முற்றிலுமாக நீக்கப்படுகின்றன. சென்னையில் வீட்டுப் பயனீட்டாளர்களுக்கான மின்வெட்டு இரண்டு மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரமாகவும், தமிழகதின் பிற பகுதிகளில் நான்கு மணி நேரத்தில் இருந்து மூன்று நேரமாகவும் குறைக்கப்படும். இப்போது பணிகள் நடைபெற்று வரும் அனல் மின் நிலையத் திட்டங்கள், கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் ஆகியன விரைவில் செயல்படத் தொடங்கும். எனவே, இப்போதுள்ள மின் கட்டுப்பாடுகள் படிப்படியாக விரைந்து தளர்த்தப்படும். இது குறித்து மீண்டும் அடுத்த மாதம் ஆய்வு நடத்தப்பட்டு, உரிய முடிவுகள் எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இனி வரும் மாதங்களில் மின்வெட்டு குறைய வாய்ப்பு: மின்சார உற்பத்தியின் அளவைப் பொறுத்து, மின் வெட்டு செய்யப்படும் நேரம் ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தின் ஒரு நாளைய மின்தேவை சராசரியாக 12 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இன்றைய (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி மின்னுற்பத்தி அளவு 10,400 மெகாவாட்டாக உள்ளது. எனவே மின் பற்றாக்குறை ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது.கைகொடுக்கும் காற்றாலை: தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலமாக, சராசரியாக நாளொன்றுக்கு 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இது தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஓரளவு கைகொடுத்து வருகிறது.இப்போதைய நிலவரப்படி சுமார் ஆயிரம் மெகாவாட் மட்டுமே மின்சார தட்டுப்பாடு இருக்கிறது. இனி வரும் மாதங்களில் கூடங்குளம் அணுமின் நிலையமும், மேலும் சில அனல் மின் நிலையத் திட்டப் பணிகளும் செயல்பாட்டுக்கு வரும்போது மின் தட்டுப்பாடு முற்றிலும் நீங்கிவிடும்.எனவே, அடுத்த மாதத்தில் சென்னையில் மின்வெட்டு முற்றிலும் நீங்குவதற்கும், மாவட்டங்களில் மின்வெட்டு ஒன்று அல்லது இரண்டு மணி நேரமாகக் குறையவும் வாய்ப்புள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக