புதன், டிசம்பர் 12, 2012

மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொடர்ந்து பயணம் செய்தால் டிஸ்மிஸ்! : தமிழக அரசு


எச்சரிக்கைகளை மீறி, பள்ளி படிக்கட்டில் தொடர்ந்து பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னை பெருங்குடியில் பேருந்து மீது லாரி மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். இதில், பள்ளி பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க கல்லூரிகள், பள்ளிகளில் விழிப்புணர்வு செய்யப்படும். நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் பேரு‌ந்துக‌ள் இயக்கப்படும். போக்குவரத்து விதிகளை மீறினால் வழங்கப்படும் தண்டனை விபரம் பற்றி பிரச்சாரம் செய்யப்படும். படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் முதலில் எச்சரிக்கை செய்யப்படுவார்கள். இதுபற்றி மாணவரின் பெற்றோருக்கும், பள்ளிக்கும் தகவல் தெரிவிக்கப்படும். மாணவர்கள் தொடர்ந்து பேரு‌ந்து படிக்கட்டில் பயணம் செய்தால் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். பிறகு அவர்களை பள்ளியில் இருந்து நீக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. குறைவான பேருந்து சேவைகளும், அதிகளவிலான சன நெருக்கடி, இடப்பற்றாக்குறை என்பவையும் கூட, பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் பயணிப்பதை தூண்டிவிடுவதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக